சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா, அன்றைய ஆளுநருக்கு (பன்வாரிலால் புரோகித்) அன்றைய தினமே அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அதுதொடர்பாக அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த முடிவும் அப்போது எடுக்கவில்லை. இதன்பின்னர் அக்டோபர் மாதத்தில் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார்.

image

அவர் பொறுப்பேற்ற பின்னர், ‘அந்த சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும்’ எனக்கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரிடம் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி கோரிக்கை வைத்தார். இருப்பினும் தற்போதுவரை அந்த சட்ட மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படாமல் உள்ளது. அதனால் இன்று மீண்டுமொருமுறை ஆளுநரை நேரில் சந்தித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தொடர்புடைய செய்தி: ‘நீட்’ விலக்கு மசோதா நிறைவேற்றம்! சட்டமாக்கும் சாத்தியங்கள் குறித்து வல்லுனர்கள் விளக்கம்

இன்றைய சந்திப்பில், “நீட் தேர்வினால் மருத்துவ சேர்க்கையில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில்கொண்டு, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனே அனுப்பிவைக்க வேண்டும்” என முதல்வர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநரை அரசு தரப்பிலிருந்து வலியுறுத்த மட்டுமே முடியுமென்பதாலும், முடிவெடுக்க கட்டாயப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு கிடையாது என்பதாலும் தற்போதுவரை அரசு தரப்பில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநரிடம் கோரிக்கைகள் மட்டும் வைத்து வருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.