சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் பொழிந்துவரும் வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பாதிப்புகளை சந்தித்துள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஏழாம் தேதி முதல் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகிறார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது.
சென்னையில் பட்டாளம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில், மழையால் சேதமடைந்த மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்துசென்று முதலமைச்சர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.