மழை நீரால் சூழப்பட்ட நெல்லை சாந்திநகர் அருகேயுள்ள ரஹ்மத் நகர்!
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு… மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. அதனால் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.
உபரி நீருடன் மழைய ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் 10,000 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விடுமுறை..!
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
தொடரும் கனமழை… பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று தொடங்கி, ஐந்து நாட்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று இரவில் இருந்து தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், தூத்துக்குடி உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இன்றும் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், விருதுநகர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்து இருக்கிறது.
திருவாரூர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகள் விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.