தமிழகத்தின் மத்திய உளவுத்துறை கூடுதல் இயக்குனராக டிஜிபி ரவிச்சந்திரனை நியமித்துள்ளது மத்திய அரசு. தமிழக ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான இவர் பற்றிய சில தகவல்கள், இங்கே.
1990-ம் ஆண்டு பேட்ச் தமிழக ஐபிஎஸ் அதிகாரியான டி.வி. ரவிச்சந்திரன் முக்கிய பொறுப்பான மத்திய உளவுத்துறை கூடுதல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். ஆந்திராவை பூர்விகமாக கொண்டு சென்னையில் வசித்து வரும் டி.வி.ரவிச்சந்திரன் முதலில் நாகர்கோவிலில் ஏ.எஸ்.பி.யாக பணியில் சேர்க்கிறார். பிறகு கடலூர் மாவட்ட எஸ்பியாக பணிபுரிந்துள்ளார். இதையடுத்து தமிழக காவல்துறையின் கியூ பிரிவு எஸ்பி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்பியாக பணியாற்றி உள்ளார். 2000-ம் ஆண்டிற்கு பிறகு மத்திய அரசு பணிக்கு ரவிச்சந்திரன் சென்று விட்டார்.
டெல்லியில் உள்ள மத்திய உளவுத்துறையில் பணியாற்றினார். சென்னையில் உள்ள மத்திய உளவுத்துறை இணை இயக்குனராக பணியாற்றினார். உளவுத்துறையில் நீண்ட அனுபவத்தை பெற்றவர் ரவிச்சந்திரன். அதில் திறமையான அதிகாரி என பெயர் பெற்றவர் இவர். இதையடுத்து ஜெர்மனி நாடு பெர்லினில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பல ஆண்டுகள் பணியாற்றினர். இந்நிலையில் மீண்டும் டெல்லியில் உள்ள மத்திய உளவுத்துறையின் தலைமையகத்திற்கு மீண்டும் மாற்றப்பட்டார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ரவிச்சந்திரன் டிஜிபி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். தொடர்ந்து டெல்லியிலேயே பணியாற்றி வந்த அவர் தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் உள்ள மத்திய உளவுத்துறைக்கு கூடுதல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். சுமார் 20 ஆண்டுகளாக டிஜிபி ரவிச்சந்திரன் மத்திய அரசு பணியிலேயே இருந்து வருகிறார். அதைபோல மத்திய உளவுத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி அதிக அனுபவம் கொண்ட அதிகாரி என தமிழக காவல்துறை அதிகாரிகள் இவரை பாராட்டுகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த 2 நாள்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆந்திராவை பூர்வமாக கொண்ட டிஜிபி ரவிச்சந்திரன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது தந்தை ஆந்திரா அரசின் வனத்துறையில் செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரவிச்சந்திரனை சென்னையில் உள்ள மத்திய உளவுத்துறைக்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன் கூடுதல் இயக்குனராக இருந்த வந்த சேர்மராஜனை டெல்லி தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
– சுப்ரமணியன்.