வேதா இல்லம் யாருக்கு?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த `போயஸ் தோட்டம்’ இல்லம் கடந்த ஆட்சியில் அரசுடைமையாக்கப்பட்டது. இதை ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.
தீபா, தீபக் ஆகியோர் தனிநபர் சொத்துகளைக் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டமியற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை என வாதாடுகின்றனர். மேலும், தங்களிடம் ஆலோசிக்காமலேயே வீட்டுக்கு 67.9 கோடி ரூபாய் என இழப்பீடு நிர்ணயித்தது தவறு எனக் கூறுகின்றனர். அதேநேரத்தில் அரசு தரப்பில் இல்லத்தைக் கையப்படுத்தும் முன்பு அனைத்துத் தரப்பு கருத்துகளைக் கேட்டதாகவும், அரசியல்ரீதியாகவும், தனிப்பட்டவிதத்திலும் பல்வேறு பிரச்னைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் அவருக்கு உறுதுணையாக இருந்ததில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.