உலகப் புகழ்பெற்ற ஜான் எஃப் கென்னடி மையத்தில் தான் ஆற்றிய சிற்றுரை வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தார் வீர் தாஸ். ‘நான் இரண்டு இந்தியாக்களில் இருந்து வருகிறேன்’ (I COME FROM TWO INDIAS) என்ற தலைப்பில் அவர் பேசியது ஒரு தரப்பிலிருந்து பாராட்டுதல்களையும், இன்னொரு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகளையும் சந்தித்தது.
இந்நிலையில், ’உங்களுக்கு நான் சொல்வது வேடிக்கையாக தெரியவில்லை என்றால் சிரிக்காதீர்கள்’ என காட்டமாக தெரிவித்துள்ளார் வீர் தாஸ்.
இந்தியா டுடே பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டியில் இதனை சொல்லியுள்ளார் அவர். “நான் இங்கு எனது பணியை தான் செய்கிறேன். தொடர்ந்து இதை செய்வேன். ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. மக்களை சிரிக்க வைப்பது தான் எனது பணி. உங்களுக்கு நான் சொல்வது வேடிக்கையாக தெரியவில்லை என்றால் சிரிக்காதீர்கள்.
நான் எனது ரசிகர்களுக்காக தான் காமெடி செய்கிறேன். அதை எழுதியதும் நான் தான்” என தெரிவித்துள்ளார் அவர்.
அந்த நிகழ்வில் வீர் தாஸ் பேசியதன் முக்கிய அம்சங்கள்:
> “பெண்களின் நிலை: “பகல் நேரத்தில் பெண்களை தெய்வமாக வழிபட்டுவிட்டு, இரவு நேரங்களில் அவர்களையே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யும் இந்தியாவில் இருந்து நான் வருகிறேன்.
> கிரிக்கெட்: ஒவ்வொரு முறையும் பச்சை ஜெர்ஸி (பாகிஸ்தான்) அணியுடன் விளையாடும்போது, நீல ஜெர்ஸி வெற்றியடைய வேண்டும் என்ற ஆசைப்படும் இந்தியாவில் இருந்து நான் வருகிறேன். ஆனால், பச்சை ஜெர்ஸியுடன் தோற்கும்போது திடீரென நீலம், காவியாக மாறுகிறது.
_
> அரசியல்: 30 வயதுக்கும் குறைவான உழைக்கும் மக்கள் அதிகம் கொண்ட இளைஞர்கள் வசிக்கும் நாட்டில் 75 வயது கொண்ட தலைவரின் 150 வருட மிகப் பழையமான சிந்தனைகளை செயல்படுத்த நினைக்கும் இந்தியாவில் நான் வருகிறேன்.
> பிஎம் கேர்: பிரதமருக்காக அக்கறை கொள்ளும் மக்களுக்கு, பிஎம் கேர் நிதி குறித்து தகவல் கிடைக்காத இந்தியாவில் இருந்து நான் வருகிறேன்.
> ஆளும் கட்சி: ஆங்கிலேய ஆட்சியை அகற்றிய பெருமையுடன், அரசாங்கத்தை ‘ஆளும் கட்சி’ என அழைக்கும் இந்தியாவில் இருந்து வருகிறேன்.
> விவசாயம்: நாங்கள் சைவம் உண்பவர்கள் எனப் பெருமையாக கூறிக்கொண்டு, காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகள் மீது வண்டிகளை ஏற்றும் இந்தியாவில் இருந்து நான் வருகிறேன்.
> வெளிநாட்டு வேலை: வீட்டு வேலையாக இருந்தாலும், டிரைவர் வேலையாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் அந்த வேலையை அமெரிக்காவில் சென்று பார்க்க விரும்பும் மனம் கொண்ட இந்தியாவில் இருந்து வருகிறேன்.
> பெட்ரோல் விலை: இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துஸ்வர்கள் என அனைவரும் ஒற்றுமையாக வாழும் இந்தியாவில் இருந்து வருகிறேன்; நாங்கள் அனைவரும் தற்போது ஒற்றுமையை தாண்டி இப்போது விண்ணை முட்டும் பெட்ரோல் விலையை மட்டுமே பார்க்கிறோம்.” இவ்வாறு பேசியிருந்தார்.