வீடு இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் கனமழை காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்ததில், 13 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கிறார்கள். இது தொடர்பான தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் அங்கு விரைந்து பணிகளைத் துரிதப்படுத்தினர். தொடர் கனமழை காரணமாக, குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில், இந்த விபரீத சம்பவம் நேர்ந்திருக்கிறது. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள், நான்கு பெண்கள் என எட்டுப் பேர் பலியாகியிருப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஐந்து பேர் மீட்கப்பட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
விழுப்புரத்தை அடுத்துள்ள திருப்பாச்சூர் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு
தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, பம்பை ஆறு, துரிஞ்சல் ஆறு ஆகிய ஆறுகளிலிருந்து 30,000 கனஅடி உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுவதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எல்லீஸ் சத்திரம் தடுப்பணை, தளவானூர் தடுப்பணை, சொர்ணாவூர் தடுப்பணை ஆகிய தடுப்பணைகள் வழியாக வங்கக்கடலில் கலக்கவிருப்பதால், இன்று தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வரக்கூடும் என்பதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள 16 கிராம மக்கள் ஆற்றுப் பகுதிக்குச் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கரையைக் கடந்தது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3 – 4 மணி அளவில் புதுச்சேரி – சென்னை இடையே கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகத்தில் நேற்று முதல் நல்ல மழை பெய்துவருகிறது.
குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நேற்று இரவு முதல் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக வேலூர் பொன்னை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக வேலூரில் உள்ள கிராமத்தில் வெள்ளநீர் புகுந்துள்ளது. பிரதான சாலையான வேலூர் = சித்தூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.