தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும், தென் தமிழகத்தை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை, நீலகிரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.