துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதற்காக, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவ மாணவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (UAPA) போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை கொண்டாடிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன, பல பகுதிகளில் பட்டாசுகளும் வெடித்தன. எனவே இது தொடர்பாக கரண் நகர் மற்றும் சௌரா காவல் நிலையங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்கிம் செளரா கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சூழலில், மனிதாபிமான அடிப்படையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுமாறு லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவிடம் ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் நசீர் குஹேமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்கள் மீதான UAPA குற்றச்சாட்டுகள் கடுமையான தண்டனையாகும், இது அவர்களின் எதிர்காலத்தை அழித்து அவர்களை மேலும் அந்நியப்படுத்தும். நாங்கள் அவர்களின் செயலை நியாயப்படுத்தவில்லை, ஆனால் இந்த நடவடிக்கை மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கும்” என்றார்.
இதனைப்படிக்க…‘நச்சைக் கக்கும் தமிழ்நாட்டு அனல்மின் நிலையங்கள்’ – அதிர்ச்சி கிளப்பும் ஆய்வு