நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், பிரதமர் மோடியை நாளை டெல்லியில் சந்திக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் 6 நாள் பயணமாக இன்று மாலை டெல்லி செல்லும் ஆளுநர் நாளை காலை பிரதமரை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விளக்கு அளிக்கும் சட்ட மசோதா குறித்து பிரதமரிடம் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பிரதமருடன் சந்திப்பு முடிந்தவுடன் மூத்த அமைச்சர்களையும் ஆளுநர் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பிரதமரை ஆளுநர் சந்திக்க உள்ளதால் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் டெல்லி சென்றபோது உள்துறை அமைச்சர், குடியரசுத் தலைவர் ஆகியோரை தமிழக ஆளுநர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது