உயர்ந்த சிந்தனையோடு உதவிக்கு ஓடிவரும் கும்ப ராசி அன்பர்களே!
13.11.2021 அன்று குருபகவான் மகர ராசியில் இருந்து பெயர்ச்சி ஆகி கும்ப ராசிக்குள் வருகிறார். அதாவது உங்களுக்கு ஜன்ம குருவாக வருகிறார். மகர ராசி என்பது உங்களுக்கு விரைய ஸ்தானம். இதுவரை விரையஸ்தானத்தில் அமர்ந்துகொண்டு பல செலவுகளுக்கும் காரணமாக அமைந்தார். மேலும் தங்களின் இரண்டாம் இடம் மற்றும் பத்தாம் இடத்துக்கு அதிபதியான குருபகவான் விரைய ஸ்தானத்திலிருந்து விடுபட்டு ராசிக்குள் வருவது பல நற்பலன்களையே கொடுக்கும். இதுவரை இருந்துவந்த கஷ்டங்கள் குறையும்.
புதிய வேகம் பிறக்கும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவுகள் சரியாகும். திட்டமிட்டபடி செயல்களை முடிப்பீர்கள். அரசாங்கத்திடம் எதிர்பார்த்திருந்த காரியங்கள் அனுகூலமாகும். தூர தேசப் பயணங்கள்கைகூடும்.
அதே வேளையில் ஜன்ம குரு என்றாலே பொறுப்புகள் கூடும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பணிச்சுமை வழக்கத்தைவிட அதிகமாகும். அதிகப்படியான உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களால் முடியாத விஷயங்கள் எது என்பதை அறிந்து கொண்டு முடிவெடுங்கள். வாக்குத் தரும்போது யோசித்துத் தாருங்கள். தேவையில்லாமல் பேசி மாட்டிக்கொள்ள வேண்டாம். யாருக்கும் இரவலாக நகைகளைத் தரவேண்டாம்.
மனதில் அச்சங்கள் அதிகரிக்கும். தேவையின்றி பயப்படுவீர்கள். இல்லாத நோயை இருப்பதுபோலக் கற்பனை செய்துகொள்வீர்கள். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதோடு தைரியமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
குரு பகவானின் மிதுனத்தைப் பார்ப்பதால் நற் பலன்கள் உண்டாகும். ஏழரைச் சனியின் பாதிப்புகள் குறையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் சிம்மத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளைக் கோலாகலமாக நடத்துவீர்கள்.
குருவின் பார்வை துலாம் ராசியில் படுவதால் பணவரவுக்குக் குறைவு இல்லை. அரசியல்வாதிகள் கோஷ்டி பூசலில் சிக்காமல் இருப்பது நல்லது. புதிய பதவி வந்து சேரும்.
அவிட்ட நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்
13.11.2021 முதல் 30.12.2021 வரையிலான இந்தக் காலகட்டத்தில் குருபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவைவிட அதிகம் இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீடு மனை வாங்குவது குறித்துத் திட்டமிடுவீர்கள். .
சதய நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்
31.12.2021 முதல் 02.03.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் சதய நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் மனதில் லேசான படபடப்பு, பயம், தாழ்வுமனப்பான்மை உண்டாகும். வேற்றுமதத்தவர்கள் உதவி செய்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்னக் குறைபாடுகள் வந்துபோகும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டும் முயற்சிகள் கைகூடும். நீண்ட நாள்களாக வராமல் நிலுவையில் இருந்த கைமாற்றுத் தொகை மீண்டும் கைக்கு வரும். புதிய நட்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவானின் சஞ்சாரம்
02.03.2022 முதல் 13.04.2022 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த அனுமதி மற்றும் ஒப்புதல்கள் சாதகமாகும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய பொறுப்புகள் தேடிவரும் காலம் இது என்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சவால்களை சந்திக்கத் தேவையான சாமர்த்தியத்தையும், சகிப்புத்தன்மையையும், பணவரவையும் தரும்.
பரிகாரத் தலம்: திருக்கருகாவூர்
வணங்க வேண்டிய தெய்வம்: ஸ்ரீமுல்லைவனேஸ்வரர்