முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய சுமார் 50 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. ஏராளமான தங்கம், வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டதாகச் செய்திகள் வெளிவரும் நிலையில், தன்னுடைய வீட்டிலிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று விஜயபாஸ்கர் விளக்கமளித்திருக்கிறார். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் நடத்தியதுபோல, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, வீரமணிக்குத் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது. கோவையில் வேலுமணி வீட்டில் ரெய்டுக்காக அதிகாரிகள் நுழைந்தபோதே, ஏராளமான அ.தி.மு.க தொண்டர்கள் குவிந்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன்தான் ரெய்டை நடத்தி முடித்தார்கள் அதிகாரிகள். வேலுமணிக்காக குவிந்த கூட்டம், விஜயபாஸ்கருக்காக கூடவில்லை என்பது அ.தி.மு.க-வினர் மத்தியில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஒருவர், “வேலுமணி வீட்டில் ரெய்டு தொடங்குவதற்கு முன்னதாகவே, அரசல் புரசலாக விஷயம் லீக் அவுட் ஆகிவிட்டது. தவிர, கட்சியில் அமைப்புச் செயலாளரான வேலுமணி, தன் மீதுதான் முதல் தாக்குதல் தொடுக்கப்படும் என எதிர்பார்த்துதான் இருந்தார். இதனால், சுதாரிப்பான அவர் தன்னுடைய வீட்டில் ஆயிரத்துக்கும் அதிகமானோரைக் களமிறக்கி அரசியல் அதிரடியைக் காட்டினார். ஆனால், விஜயபாஸ்கர் விஷயத்தில் நடந்தது வேறு. அ.தி.மு.க-வின் பொன்விழா கொண்டாட்டம் சூடு குறைவதற்கு முன்னதாகவே இந்த லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டை நடத்தியிருக்கிறது தி.மு.க அரசு. இந்த அதிரடியைக் கட்சிக்குள்ளேயே யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால், போதிய எண்ணிக்கையில் தன் ஆதரவாளர்களையும் விஜயபாஸ்கரால் திரட்ட முடியவில்லை. ஆனாலும், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விஜயபாஸ்கரின் வீட்டுக்கே சென்று கட்சி அவர் பின்னால் இருப்பதை உணர்த்தினர்.
Also Read: விஜயபாஸ்கர்: 16 மணிநேரம் நடந்த சோதனை; தப்பிய சில முக்கிய `தலைகள்’ – ரெய்டு பின்னணி!
விஜயபாஸ்கர் விஷயத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும். ஆட்சியை அ.தி.மு.க பறிகொடுத்த நாளில் இருந்தே அவர் அமைதியாகத்தான் ஒதுங்கியிருக்கிறார். தி.மு.க அரசுக்கு எதிராக எதுவும் பேசுவதில்லை. யார் கண்ணையும் தான் உறுத்திவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் விஜயபாஸ்கர்.
ஆனால், அவர்மீது ஏற்கெனவே குறிவைத்துவிட்ட தி.மு.க அரசு, பொன்விழா கொண்டாட்டம் ஓய்வதற்கு முன்னாலேயே ரெய்டு அஸ்திரத்தை ஏவியிருக்கிறது. இந்தச் சூழலில், தன்னுடைய தி.மு.க எதிர்ப்பு நிலையை காட்டியாக வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார் விஜயபாஸ்கர். அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கு கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டவுடன், அ.தி.மு.க-வின் பொன்விழாவையொட்டி திருச்சியில் மாநில மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த மாநாட்டில் தன்னுடைய ஆதரவாளர்களை திரளாகத் திரட்டி மாஸ் காண்பிக்க முடிவெடுத்திருக்கிறார் விஜயபாஸ்கர்” என்றார்.
மாநாட்டில் மாஸ் காண்பிக்க விஜயபாஸ்கர் முடிவெடுத்தாலும், அதற்குள் அவரை வளைத்துவிட லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாகியிருக்கிறதாம். சென்னை நந்தனத்திலுள்ள அவரின் முன்னாள் உதவியாளர் சரவணனின் வீட்டுக்குச் சென்றிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், பூட்டப்பட்ட வீட்டுக்கு சீல் வைத்துவிட்டு வந்திருக்கிறார்கள். இந்த சரவணன்தான் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ‘ஆல் இன் ஆல்’ளாக செயல்பட்டவராம். முதலில் சரவணனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துவிட்டு, பிறகு விஜயபாஸ்கரையும் வளைத்துவிடத் தீவிரமாகியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.