‘நான் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில்லை என்கிற முடிவில் இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார் நடிகை பூஜா பேடி.
பாலிவுட் நடிகை பூஜா பேடிக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் பூஜா பேடி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பூஜா பேடி கூறுகையில், ”எனக்கு மட்டும் எப்படி கொரோனா வரவில்லை என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் ஒரு வழியாக எனக்கும் கொரோனா வந்துவிட்டது. 2 நாட்களாக இருமல் மற்றும் காய்ச்சலாக இருந்தது. நான் ஏதோ அலர்ஜி என்று முதலில் நினைத்தேன். அதன் பிறகு பரிசோதனை செய்து பார்த்தபோது கொரோனா இருப்பது தெரிய வந்தது. தேவையான சிகிச்சையை எடுத்து வருகிறேன். எனக்கு மட்டும் அல்ல, என் வருங்கால கணவர், எங்கள் வீட்டில் வேலை செய்பவருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
நான் என் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைதான் நம்பியிருக்கிறேன். நான் தடுப்பூசி போடுவது இல்லை என்கிற முடிவில் இருக்கிறேன். இயற்கையான முறையில் குணமடைய விரும்புகிறேன். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள். தடுப்பூசிகள் வெளிவருவதற்கு முன்பே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 99 சதவிகித பேர் மீண்டுள்ளனர். அதேவேளையில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட 99 சதவிகித பேரும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டிருக்கிறார்கள். எனவே எச்சரிக்கையுடன் இருப்போம். பயப்பட வேண்டாம்” என்று பூஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: உலகம்: 24 கோடியே 14 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு