8 ஆண்டுகளாக கேப்டனாக இருந்தும் ஒரு கோப்பையைக் கூட ஆர்சிபி அணிக்காக வென்று கொடுக்காமல் வெளியேறியிருக்கிறார் விராட் கோலி.
டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி. அடுத்ததாக, ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே-ஆஃப் சுற்றில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆட்டத்தில் ஆர்சிபி அணி தோற்றதையடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து அந்த அணி வெளியேறியுள்ளது. இதையடுத்து ஆர்சிபி கேப்டன் பதவியின் கடைசி நாளும் கோலிக்கு முடிந்துள்ளது. எனினும் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வரை ஆர்சிபி அணியில் தொடர்வேன் எனவும் கூறியிருக்கிறார் கோலி.
2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து கோலியின் கேப்டன் பயணம் தொடங்கியது. அப்போதிருந்து இந்த சீசன் வரை ஆர்சிபி அணியின் கேப்டனாக கோலி தொடர்ந்தார். 8 ஆண்டுகளாக கேப்டனாக இருந்தும் கோலியால் ஒரு கோப்பையைக் கூட ஆர்சிபி அணிக்காக வென்று கொடுக்காமல் வெளியேறியிருக்கிறார். 2016-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற கோலி 2-வது இடத்தைப் பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி கேப்டனாக கோலி சாதித்தது என்ன?
ஆட்டங்கள் – 140
வெற்றி – 66
தோல்வி – 70
முடிவு இல்லை – 4,
வெற்றி சதவீதம் – 47.17%
ஆர்சிபி கேப்டனாக விளையாடிய ஆட்டங்களில் எடுத்த ரன்கள்:
ஆட்டங்கள் – 139 இன்னிங்ஸ்
ரன்கள் – 4871
சராசரி – 41.99
ஸ்டிரைக் ரேட் – 133.05
சதங்கள் – 5
அரை சதங்கள் – 35