நடப்பு ஐபிஎல் சீசனுடன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி. எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூர் தோல்வியை தழுவியாதல் தொடரை விட்டு வெளியேறி உள்ளது. இனி அடுத்த சீசன் முதல் கோலி, ஒரு வீரராக பெங்களூர் அணியில் விளையாட உள்ளார்.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாரா, கோலியின் முடிவு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“நான் மட்டும் பெங்களூர் அணியின் உரிமையாளராக இருந்திருந்தால் கோலியிடம் தனிப்பட்ட முறையில் கேப்டன் பொறுப்பை தொடருமாறு கேட்டிருப்பேன். ஏனெனில் ஒரு வீரராகவும், ஒரு அணியின் தலைவராகவும் அவரை இரு வேறு நபராக நான் பார்க்கிறேன். மிகவும் திறமை வாய்ந்த, வயதில் இளையவரான அவர் எப்படியும் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார். இத்தகைய சூழலில் அவர் வேறொரு வீரரின் தலைமையின் கீழ் ஆடுவதை பார்க்க மனமில்லை.
கோலி கேப்டனாக இல்லாத பெங்களூர் அணி எப்படி மாறும் என்பது தெரியவில்லை. அதனால் தான் சொல்கிறேன் நான் உரிமையாளராக இருந்தால் மீண்டும் ஒரு முறை முற்றிலும் மாறுபட்ட அணியை உங்களது தலைமையில் அமைத்து, விளையாடுவோம் என சொல்வேன்” என லாரா தெரிவித்துள்ளார்.