லக்கிம்பூர் வன்முறையை கண்டித்து மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரி கேரியில் நடந்த வன்முறையில் விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து உள்ளன. இந்தநிலையில் உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மகாராஷ்டிராவில் இன்று (திங்கட்கிழமை) ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். 3 கம்பெனி மாநில ரிசர்வ் போலீசார், 500 ஊர்காவல் படை வீரர்கள், உள்ளூர் ஆயுத படையை சேர்ந்த 700 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மும்பை உள்பட மாநிலம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதலே முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது. பழங்கள், காய்கறிகள், வெங்காயம், உருளைக்கிழங்கு சந்தைகள் இன்று மூடப்படும் என்று சத்ரபதி சிவாஜி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. விளைபொருட்களை விவசாயிகள் இன்று சந்தைக்கு கொண்டுவர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை, ஆம்புலன்ஸ் சேவை, மருந்து கடைகள், பால் விநிரோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவை அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், மாநிலம் தழுவிய வேலைநிறுத்த அறிவிப்பை மகாராஷ்டிரா மாநில பாஜக விமர்சித்துள்ளது. லக்கிம்பூர் கேரி சம்பவத்தை ஆளும் கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.