மதுரை மாவட்ட அதிமுகவில் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டுக் கொண்டிருந்த மாவட்ட செயலாளர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் இன்று ஒன்றாக இணைந்து மதுரை கலெக்டரிடம் இன்று புகார் மனு அளித்ததது அதிமுகவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் ஆளும்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டு, திருமங்கலம் பார்முலா மூலம் வெற்றி பெற திட்டமிட்டு வருவதாக புகார் தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Also Read: பதறும் தி.மு.க… திணறும் அ.தி.மு.க… மிரளும் இதர கட்சிகள்… உள்ளாட்சி உச்சகட்டம்!
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “மதுரை மாவட்டத்திலுள்ள மாவட்ட ஊராட்சி 16-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள 97 வாக்கு சாவடிகளில் 10-ல் மட்டுமே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
அனைத்து வாக்கு சாவடிக்கும் சிசிடிவி பொருத்த வேண்டும். மக்கள் அச்சுறுத்தல் இல்லாமல் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும்.
உலகறிந்த திருமங்கலம் பார்முலாவை மீண்டும் செயல்படுத்தி திமுக வெற்றி பெற முயற்சிப்பதாக தகவல் வந்துள்ளது. அதிமுக வெற்றியை தடுக்க அரசு இயந்திரங்களை திமுக அரசு தவறாக பயன்படுத்துகிறது.
திமுகவினர் செய்யும் பணப்பட்டுவாடா குறித்தும் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். ஆளும்கட்சி அதிகார துஷ்பிரயோகம் தொடர்ந்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்.” என்றார்.