ஆஃப்கானிஸ்தானில் பசியில் தவிக்கும் மக்களுக்கு உதவ துருக்கி மற்றும் பாகிஸ்தானிலிருந்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுடன் லாரிகள் சென்றுள்ளன.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு கடுமையான பசி, பட்டினி நிலைமை காணப்படுகிறது. இதையடுத்து துருக்கியில் உள்ள செம்பிறை சங்கத்தினர் பாகிஸ்தானில் உள்ள தங்கள் அமைப்பினருடன் இணைந்து அரிசி, மாவு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை 2 லாரிகளில் ஏற்றி ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளனர். கடந்த சில மாதங்களில் மட்டும் ஆப்கானிஸ்தானில் சுமார் 5 லட்சம் பேர் தலிபான்களுக்கு அஞ்சி தங்கள் வீடுகளை விட்டு தப்பி ஓடி வசிக்க இடமின்றி தவித்து வருகின்றனர். அது போன்றவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அரசுக்கு சொந்தமான சொத்துகள் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள நிலையில் பணத்தாள் புழக்கமின்றி பெரும் பொருளாதார சீர்கேட்டை அந்நாட்டு மக்கள் எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் வரும் மாதங்களில் உணவு தானிய தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்றும் மருத்துவசேவைகள் முற்றிலும் சீர்குலையும் என்றும் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்கள் எச்சரித்துள்ளன.