உணவு விநியோகிக்கும் பணியாளர்களுக்கு உதய்பூர் வணிக வளாகம் விதித்துள்ள கட்டுப்பாடு கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள வணிக வளாகம் ஒன்று, உணவு விநியோகிக்கும் பணியில் உள்ள ஸ்விகி மற்றும் ஸோமோட்டோ பணியாளர்கள் லிஃப்டை பயன்படுத்தக்கூடாது என்றும், படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் கட்டுப்பாட்டினை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு குறித்து சமூக வலைதளத்தில் தகவல் வெளியாக, அனைவரும், உணவு விநியோகிக்கும் பணியாளர்களுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு உணவகமோ, உணவு விநியோகிக்கும் பணியாளர்கள் தங்கள் இடத்தில் உள்ள கழிவறையைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
உணவு விநியோகிக்கும் பணியாளர்களும் மனிதர்களே, அவர்களுக்கு உரிய மரியாதையை அளிப்பது அனைவரின் கடமை என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். விரும்பும் உணவை நாம் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து தரும் சிறப்பான பணியைச் செய்து வரும் உணவு விநியோகிக்கும் பணியாளர்களை மரியாதையுடன் நடத்துவது அவசியம்.