நடப்பு ஐபிஎல் சீசனின் 35-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பந்து வீச்சை தேர்வு செய்தார்.

image

கோலி – படிக்கல் தொடக்கம்! 

பெங்களூர் அணிக்காக அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் பெங்களூர் அணி ரன் குவிப்பதற்கான அஸ்திவாரத்தை பலமாக அமைத்துக் கொடுப்பதில் வல்லவர்கள். இந்த சீசனில் கோலி – படிக்கல் இணையர் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 178 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த ஆட்டத்திலும் முதல் விக்கெட்டிற்கு 111 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

image

கோலி அரைசதம்!

விராட் கோலி 41 பந்துகளில் 53 ரன்களை எடுத்து அவுட்டானார். அவரது இன்னிங்ஸில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். கோலியின் விக்கெட்டை 14-வது ஓவரில் பிராவோ கைப்பற்றினார். இந்த ஆட்டதின் மூலம் கோலி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஏப்ரலில் நடைபெற்ற ஆட்டத்திற்கு பிறகு ஐபிஎல் அரங்கில் அரைசதம் பதிவு செய்திருந்தார். 

image

படிக்கல் அசத்தல்!

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் 50 பந்துகளில் 70 ரன்களை சேர்த்து அசத்தினார். ஐந்து பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களை விரட்டியிருந்தார் படிக்கல். அவர் களத்தில் இருந்த வரை ரன் குவிப்பதில் பிஸியாக இருந்தார். 

ஏமாற்றிய பின்வரிசை பேட்ஸ்மேன்கள்!

வெற்றிகரமான தொடக்கம் கிடைத்தும் பெங்களூர் அணி அதை கேரி செய்ய தவறிவிட்டது. டிவில்லியர்ஸ், டிம் டேவிட், மேக்ஸ்வெல், ஹர்ஷல் பட்டேல் என நான்கு விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். அது பெங்களூர் அணிக்கு பின்னடைவை கொடுத்தது. 

image

டெத் ஓவர்களில் அசத்திய சென்னை பவுலர்கள்!

200 ரன்களுக்கு மேல் பெங்களூர் அணி எடுக்கும் என்ற போக்கில் தான் ஆட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் 17, 19, 20 என மூன்று ஓவர்களில் ஆட்டத்தையே மாற்றிவிட்டனர் சென்னை பவுலர்கள். 

17-வது ஓவரில் தாக்கூர், டிவில்லியர்ஸ் மற்றும் படிக்கல் என இருவரையும் வெளியேற்றினார். அது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. டிம் டேவிட் விக்கெட்டை 19-வது ஓவரில் கைப்பற்றினார் தீபக் சஹார். கடைசி ஓவரை வீசிய பிராவோ, மேக்ஸ்வெல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

கோலி அவுட்டான பிறகு மொத்தம் 45 ரன்களை தான் பெங்களூர் அணி எடுத்திருந்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்தது பெங்களூர். 

image

சென்னை சேஸிங்…

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது சென்னை அணி. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளசிஸ் இன்னிங்ஸை தொடங்கினர். ருதுராஜ் செம பார்மில் இருந்தார் என்பதை கடந்த போட்டியிலேயே வெளிப்படுத்தி இருந்தார். அதே போலவே இந்த இன்னிங்ஸையும் அணுகினார். அவருக்கு டூப்ளசிஸ் நல்ல கம்பெனி கொடுத்தார். அதன் பலனாக பவர் பிளே ஓவர் முடிவில் விக்கே இழப்பின்றி 59 ரன்களை எடுத்திருந்தது சென்னை அணி. 

இருவரும் 71 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். ருதுராஜ் 38 ரன்களிலும், டூப்ளசிஸ் 31 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாகி இருந்தனர். 

image

மொயின் அலி – ராயுடு!

சென்னை 71 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் அவுட்டானதால் மொயின் அலி, ராயுடு என இருவரும் களத்திற்கு வந்திருந்தனர். மீண்டும் இன்னிங்ஸை முதலில் இருந்து அவர்கள் தொடங்க வேண்டி இருந்தது. 

இருவரும் சிறப்பாக ஆட்டத்தின் சூழலை புரிந்து கொண்டு விளையாடினர். மிடில் ஓவர்களில் சிறப்பாக விளையாடி 47 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். மொயின் அலி 23 ரன்களிலும், ராயுடு 32 ரன்களிலும் வெளியேறினர். 

பின்னர் வந்த ரெய்னாவும், தோனியும் சென்னைக்கு தேவைப்பட்ட வெற்றிக்கான ரன்களை அடித்தனர். 11 பந்துகள் எஞ்சியிருக்க சென்னை 4 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 

image

பெங்களூர் அணியின் தோல்விக்கு காரணம் என்ன?

பெங்களூர் அணி பேட் செய்த போது 10 ஓவர்கள் முடிவில் 90 ரன்களை எடுத்திருந்தது. ஆனால் அதற்கு பிறகான 10 ஓவர்களில் வெறும் 66 ரன்களை மட்டுமே எடுத்து ஆறு விக்கெட்டுகளை இழந்தது. இது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. 

“நாங்கள் பேட் செய்த போது 15 – 20 ரன்களை கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். அதை மிஸ் செய்ததாக கருதுகிறேன். 175 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம். எங்களது பந்து வீச்சும் சிறப்பானதாக இன்று அமையவில்லை. சென்னை அணியின் பவுலர்கள் இரண்டாவது பாதி இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்” என கோலி ஆட்டத்திற்கு பிறகு தெரிவித்திருந்தார். 

image

சென்னை அணியின் வெற்றிக்கு காரணம் என்ன?

“வீரர்கள் அனைவரும் அவரவர் ரோல்களை உணர்ந்து விளையாடியதன் பலன் இது. அதற்காக கடுமையாக உழைத்துள்ளார்கள் எங்கள் அணி வீரர்கள். இங்குள்ள மூன்று மைதானங்களும் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. அதிலும் ஷார்ஜா மைதானம் மிகவும் ஸ்லோவான ஆடுகளமாக உள்ளது. பிராவோ சிறப்பாக பந்து வீசி இருந்தார்” என தோனி வெற்றிக்கு பிறகு தெரிவித்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முந்தியுள்ளது சென்னை. 

image

சென்னை அணி அமீரகத்தில் தொடர்ச்சியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. பெங்களூர் அணி அமீரகத்தில் தொடர்ச்சியாக ஏழு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற சென்னை அணிக்கு ஒரே ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாம் : ஐபிஎல் கிரிக்கெட்டில் மாஸ் காட்டும் ரஜினி ரசிகர் : மும்பையை மிரட்டிய வெங்கடேஷ் ஐயரின் கதை! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.