விகடனின் Doubt of Common Man பக்கத்தில் தேவா என்ற வாசகர், “பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன? விளக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
நிலம் அல்லது வீடு வாங்கி பதிவு செய்யும்போது பட்டா சிட்டா போன்ற வார்த்தைகளை அதிகம் கேட்டிருப்போம். பட்டா சிட்டா போன்ற விஷயங்கள் எல்லாம் சாதாரணவைதான். ஆனால் நிறையப் பேருக்கு அது குறித்த சந்தேகம் இப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. பட்டா சிட்டா குறித்த விஷயங்களில் அதிக ஏமாற்று வேலைகளும் நடப்பதனால் இவை குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. நம் வாசகர் ஒருவருக்கும் இது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.
Also Read: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதன்படி தற்போது பணி வழங்கப்படுகிறதா? | Doubt of Common Man
வாசகரின் கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளும் பொருட்டு சிவ.இளங்கோ அவர்களிடம் பேசினோம், “பட்டா என்கிற சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது. பட்டா என்பது ஒரு அசையா சொத்தின் உரிமையாளர் யார் என்பதற்கு வருவாய்த் துறை வழங்கக்கூடிய ஓர் ஆவணம். பட்டாவில் கூட்டுப் பட்டா, தனிப் பட்டா என இரண்டு வகைகள் உண்டு. என்னிடம் இருந்து ஒருவர் நிலம் வாங்கினால் அவருக்கு அளிக்கப்படும் பட்டா தனிப் பட்டா. நிலத்திற்கான சர்வே எண் உங்கள் பெயருக்கு மாற்றப்படும். ஒரு நிலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருந்தால், அந்த நிலத்திற்குக் கூட்டுப் பட்டா வழங்கப்படும்.
உதாரணமாக ஒரு பிளாட்டில் பத்து பேர் இருக்கிறார்கள் என்றால், பத்து பேருடைய பெயரிலும் பட்டா இருக்கும். அதன் பெயர் கூட்டுப் பட்டா. பொதுவாக நிலம் வாங்கிய 15 நாள்களில் பட்டா வழங்கப்படும். ஒருவரிடம் இருக்கும் நிலத்தின் ஒரு பகுதியை மட்டும் வாங்கினால் அரசு ஊழியர்கள் அளந்து பார்த்து சர்வே எண்ணில் உட்பிரிவு வகுத்து பட்டா வழங்க வேண்டும். சர்வே எண் என்பது, நமக்கு ஆதார் எண் இருப்பது போல நிலத்துக்கான அடையாள எண். சர்வே எண் 144 என்ற நிலத்தைப் பிரிக்கும் போது ஒருவருக்கு 144A என்ற உட்பிரிவைப் பிரித்து வழங்குவர். சர்வே எண்ணைப் புல எண் என்றும் குறிப்பிடுவர்.
இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்கள்!
சிட்டா என்பது பட்டாவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுடன் சேர்த்துக் கூடுதல் தகவல்களைக் கொண்டிருக்கும். ஒரு நிலம் அமைந்திருக்கும் மாவட்டம், வட்டம், கிராமம், பட்டா வகை, உரிமையாளர், நிலம் நஞ்சையா, புஞ்சையா, பயன்பாட்டில் உள்ளதா, தீர்வை விவரங்கள் என அனைத்தும் சிட்டாவில் இருக்கும். பட்டா நிலத்திற்கான உரிமை ஆவணம், சிட்டா நிலம் குறித்த விவரங்களின் தொகுப்பு.
உங்களது நிலம் குறித்த பட்டா சிட்டா விவரங்களைத் தெரிந்து கொள்ள தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம். இணையதளத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
ஒரு கிராம நிர்வாக அலுவலர் ஒவ்வொரு ஆண்டும் அந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு சர்வே எண் கொண்ட நிலத்தையும் பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக 1 முதல் 500 வரை சர்வே எண் இருந்தால் ஒவ்வொரு நிலத்திலும் வீடு உள்ளதா, கிணறு உள்ளதா, பயிரிடப்பட்டிருக்கிறதா, என்ன வகை பயிர், கோயில் உள்ளதா, தோப்பு இருக்கிறதா, என்ன வகையான தோப்பு என அனைத்தையும் பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும். அந்த ஆவணத்தின் பெயர் அடங்கல். ஒரு வருவாய் கிராமத்தில் 1000 முதல் 2000 சர்வே எண் வரை இருக்கும். அவை குறித்த தகவல்கள் அனைத்தையும் கிராம நிர்வாக அலுவலர் பதிவு செய்ய வேண்டும். தற்போது பெரும்பாலும் நேரில் ஆய்வு செய்யாமல் முந்தைய பதிவுகள் அப்படியே காப்பி அடிக்கப்படுகின்றன.கல்வெட்டு செப்பேடுகளிலிருந்த பதிவுகள் 1908 முதல் அரசினால் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது கூடுதல் தகவல்” என்றார்.
Also Read: தமிழ்நாடு அரசு டெண்டர்களை ஒரு சாதாரண குடிமகன் எடுக்க முடியுமா? | Doubt of Common Man
இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!