காளைச் சண்டைக்கு தடை விதிக்கக் கோரி ஸ்பெயின் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக சென்றனர்.
ஸ்பெயின் நாட்டின் பாரம்பரிய விளையாட்டாக காளைச் சண்டை திகழ்கிறது. ஆனால் இவ்விளையாட்டில் களமிறக்கப்படும் காளைகள் கடுமையாக துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் பல ஆண்டுகளாகவே குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் காளைச் சண்டைக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் தலைநகர் மாட்ரிட்டின் வீதிகளில் பேரணியாக முரசொலித்தவாறு சென்றனர்.
காளைச் சண்டையை நாட்டின் கலாசாரம் என கூறி அதை தொடர்வதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர். ஸ்பெயினில் கடந்தாண்டு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 47% பேர் காளைச்சண்டைக்கு தடை விதிக்க ஆதரவு தெரிவித்திருந்தனர். தடை விதிக்கக்கூடாது என 18.6% பேரே கருத்து தெரிவித்திருந்தனர்.