கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 66 வயது விவசாயி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேப்பனப்பள்ளி அருகே சீலேப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி வெங்கட்டப்பன். இவர், இன்று காலை சைக்கிளில் தனது தோட்டத்துக்கு சென்றுள்ளார். வயலின் அருகே சென்றபோது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், வெங்கட்டப்பனை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து தப்ப முயன்ற அவர், மாதிநாயனபள்ளி கிராமச் சாலையில் ஓடியுள்ளார்.
அப்போது வெங்கட்டப்பனை பின்தொடர்ந்த கும்பல், அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியுள்ளது. சம்பவத்தை அறிந்த வேப்பணப்பள்ளி காவல் துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
கொலையுண்ட வெங்கட்டப்பனின் மகன் முருகேசன், ஓசூரில் உள்ள டைட்டன் வாட்ச் கம்பெனியில் சமையலராக இருந்தபோது கொரோனாவால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்திருந்த முருகேசனின் மனைவி ஜமுனாவும், குழந்தைகள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து உயிரிழந்ததால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.