தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென்றும், பாதுகாப்பு பணிக்கு சிஆர்பிஎப் வீரர்களை பயன்படுத்த வேண்டுமென்றும் எழுதியிருந்தார். இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. அதில், உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்தக் கூடாது என்றும், இரண்டு கட்டமாக தேர்தலை நடத்துவது கள்ள ஓட்டு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.