இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இந்திய அணியின் முகாமுக்குள் கொரோனா தொற்று பரவியதற்கு தான் காரணம் என்பதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதோடு அது தொடர்பாக விளக்கமும் கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் நான்கு போட்டிகள் முடிந்த நிலையில் ஐந்தாவது போட்டி கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக ரத்தானது.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பயோ பபூளை கருத்தில் கொள்ளாமல் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டது தான் இந்திய முகாமுக்குள் தொற்று பரவ காரணம் என விமர்சனங்கள் எழுந்தன. நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அந்த புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. அதன் பிறகு ரவி சாஸ்திரிக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர், பிஸியோ என மூவரும் அடுத்தடுத்து தொற்று பாதிப்பு உறுதியானது. இந்நிலையில் தனது விளக்கத்தை ரவி சாஸ்திரி கொடுத்துள்ளார்.
“இந்த தொடர் ஆரம்பமான நாள் முதல் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஏனெனில் ஒட்டுமொத்த இங்கிலாந்தும் கொரோனா கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் இயல்பாக தான் உள்ளது. கொரோனா சூழலுக்கு மத்தியிலும் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு இந்த கோடை காலம் சிறப்பானதாக அமைந்திருக்கும்.
இரு அணியின் வீரர்களும் அற்புதமாக இந்த தொடரில் செயல்பட்டுள்ளனர்” என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
சுகாதார கட்டுப்பாடுகள் இங்கிலாந்தில் விலக்கிக் கொள்ளப்பட்டதால் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷாவிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம் : “இது மாதிரியான பேச்சுகளை தவிர்க்க வேண்டும்” – டிம் பெய்ன் கருத்தை கண்டித்த அஸ்கர் ஆப்கன்