ரேஷன் கடையில் கைரேகை பதிவிற்கு உடல் ஒத்துழைக்காத நிலையில் மீண்டும் கைரேகையை வைத்து வரச் சொல்லி அனுப்பிய விவகாரம் தொடர்பாக இ சேவை மையத்தில் கைரேகை வைக்க அலைகழிக்கப்படும் எண்பது வயது முதியவர்கள். ரேஷன் கடைகளில் இலவச அரிசி கூட வாங்க முடியாமல் அவதிப்படும் அவலம். இ-சேவை மையத்தின் ஊழியர் அலை கழிப்பால் கலங்கி நிற்கும் முதியோர்கள். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை. இது தொடர்பாக நேற்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பயனாளிகளின் வீட்டிற்கு சென்று கைரேகை பதிவுகளை புதுப்பித்து அவர்களுக்கான ரேஷன் பொருள்களை வழங்கியது மாவட்ட நிர்வாகம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலியபெருமாள் வயது(80). இவரது மனைவி தானம்மாள்(75). தற்போது தமிழக அரசு ரேஷன் கடைகளில் பொருள் வாங்கும்போது குடும்ப உறுப்பினர்கள் கைரேகை வைக்க வேண்டும் என்று அறிவித்திருந்த நிலையில் கலியபெருமாளும் தானம்மாளும் கைரேகை பதிவு செய்துள்ளனர். வயதாகியதால் கைரேகையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக ரேஷன் கடைக்கார ஊழியர் தெரிவித்ததை தொடர்ந்து மீண்டும் இ சேவை மையத்திற்கு சென்று கைரேகை புதுப்பித்து வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து கைரேகை பதிவு செய்ய அந்த முதியோர் தம்பதி வந்துள்ளனர். ஆனால் இ-சேவை மையம் தொடர்ந்து அவர்களை அலைகழித்து வருவதாக புகார் எழுந்தது. நேற்று இ-சேவை மையத்திற்கு வருகை தந்த போது அடுத்த மாதம் ஆறாம் தேதி வருமாறு அவர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதமே தாங்கள் அரிசி வாங்க முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் இந்த மாதமும் அரிசி கூட வாங்க முடியாத நிலை இருப்பதாக கலங்கி போய் நின்றனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அவர்களுக்கு புதிய கைரேகை பதிவு செய்து தர வேண்டும் என்பது அவருடைய கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில் புதிய தலைமுறை நேற்று இதனை செய்தியாக வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் அலுவலகத்தை சேர்ந்த ஊழியர்கள் நேரடியாக குணமங்கலம் கிராமத்திற்குச் சென்று கைரேகை பதிவு புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த ரேஷன் கடையில் பயனாளிகளுக்கு வழங்கக்கடிய அனைத்து பொருட்களையும் உடனடியாக அந்த முதிய தம்பதிக்கு வழங்கினர்.
– ஜோதி நரசிம்மன்