மதுரை ஆதீனத்தின் 292-வது பீடாதிபதியான அருணகிரிநாதர் உடல் இந்துமத சாஸ்திரப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா சச்சிதானந்தமாக இருந்து வந்த 77 வயதான அருணகிரிநாதர், நேற்று இரவு காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை முதல் சிகிச்சைபெற்று வந்த மதுரை ஆதீனத்தின் 292-வது பீடாதிபதியான அருணகிரிநாதர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.
இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக நள்ளிரவில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆதீனத்தின் உடலுக்கு பிற ஆதீன மடாதிபதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து அவரது மடத்தின் உட்புறத்தில் உடலானது சித்ராசனத்தில் அமர்ந்த நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 292வது ஆதீனத்தின் உடலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்ட பின்னர், இன்று மதியம் அவரது உடல் நான்கு மாசி வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் இந்துமத சாஸ்திரப்படி பல சடங்குகளை செய்தபின்னர், அமர்ந்த நிலையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.