இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள பிரிட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 183 ரன்னும், இந்திய அணி 278 ரன்னும் எடுத்தனர். 95 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 303 ரன்கள் குவித்தது. இதனால், இந்தியா வெற்றி பெற 208 ரன்கள் தேவைப்பட்டது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது.
ஐந்தாம் மற்றும் கடைசி நாளான இன்று மழையால் ஆட்டம் தடைபட்டுள்ளது. இந்திய அணிக்கு இன்னும் 157 ரன்கள் மட்டுமே தேவை. இன்றைய நாள் முழுமையாக விளையாடினால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாகவே மழை பொழிவு அங்கு இருந்து வரும் நிலையில் இந்த போட்டியின் கடைசி நாளான இன்று இதுவரை முதல் செஷன் ஆட்டம் தடைப்பட்டது. தற்போது அடுத்த இரண்டு செஷன்களும் நடக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இந்த முறை மழையால் இங்கிலாந்து அணி தப்பித்தது. இப்போதைக்கு அந்த பகுதியில் வானம் மேக மூட்டத்துடனே காணப்படுவதாக வானிலை தகவல் வந்துள்ளது.