விளையாட்டுக் களம் ஆச்சரியங்களும், அதிசயங்களும், அதிர்ச்சியும் நிறைந்தவை. அதுவும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்றால் சொல்லவே வேண்டாம். பதக்கங்களை வெல்ல வீரர்களுக்கு இடையே நடக்கின்ற போட்டியை பார்ப்பதற்கே அற்புதமாக இருக்கும்.
டோக்கியோ ஒலிம்பிக் இனிதே நிறைவடைந்துள்ள நிலையில் இந்த ஒலிம்பிக் களத்தில் மனதிலிருந்து என்றென்றும் நீக்க முடியாத அரங்கேறிய சுவாரஸ்ய நிகழ்வுகள் குறித்து பார்ப்போம்.
தங்கப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை: ஆனந்த கூச்சலிட்ட பயிற்சியாளர்
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 20 வயது நீச்சல் வீராங்கனை அரியார்ன், ஐந்து முறை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்காவின் Katie Ledecky-யை பின்னுக்கு தள்ளி தங்கப்பதக்கம் வென்றார். 400 மீட்டர் ப்ரீஸ்டைல் ஈவெண்டில் இந்த வெற்றியை பதிவு செய்தார் அவர்.
வெற்றிக் கோட்டை அவர் நெருங்கியதை கண்டதும் அவரது பயிற்சியாளர் Dean Boxall கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். உற்சாகத்தில் தான் அணிந்திருந்த மாஸ்க்கை கழட்டி விட்டு, முஷ்டியை முறுக்கி ஆனந்த கூச்சலிட்டார். அது வைரலாக ஹிட் அடித்திருந்தது.
‘இல்வாழ்க்கையில் இணையலாமா?’: லைவ் பேட்டியிலேயே மண்டியிட்ட கோச்.. ஓகே சொன்ன வீராங்கனை!
டோக்கியோ ஒலிம்பிக்கில் அர்ஜென்டினா நாட்டுக்காக வாள்வீச்சு விளையாட்டில் களம் கண்டவர் மரியா பெலன் பெரெஸ் மாரிஸ். 36 வயது வீராங்கனையான இவர், ஹங்கேரி நாட்டின் அன்னாவிடம் 12 – 15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று வெளியேறினார்.
தோல்வி குறித்து காட்சி ஊடகம் ஒன்றிற்கு அவர் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரது பயிற்சியாளர் Lucas Guillermo Saucedo, அவருக்கு பின்னால் நின்றபடி ‘இல்வாழ்க்கையில் இணையலாமா?’ என்பதை சிறிய பேப்பரில் எழுதி சிம்பாலிக்காக கேட்க. அதை படித்ததும் ஆனந்த கூக்குரல் இட்டு ‘இனி வாழ்க்கையில் இணைந்து பயணிக்கலாம்’ என சம்மதம் தெரிவித்த நிகழ்வு அரங்கேறியது.
அந்த மனசுதான்..! தங்கப்பதக்கத்தை பகிர்ந்துகொண்ட வெவ்வேறு நாட்டு வீரர்கள்
டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகள விளையாட்டில் ஆடவர் உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் ஓர் அதிசயம் அரங்கேறியது. இந்தப் போட்டியில் பங்கேற்று விளையாடிய தங்க மனம் படைத்த அந்த இரண்டு வீரர்கள், தங்களுக்குள் தங்கப்பதக்கத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளனர். அது உலகையே ஈர்த்தது.
இத்தாலியன் ஜியான்மார்கோ தம்பேரி மற்றும் கத்தாரின் முடாஸ் எஸ்ஸா பார்ஷிம்தான் அந்த தங்க மனம் படைத்த வீரர்கள். இருவரும் 2.37 மீட்டர் உயரத்தை அசால்டாக கிளியர் செய்துவிட்டனர். ஆனால் வெற்றியாளரை தீர்மானிக்க ஆல்-டைம் ஒலிம்பிக் சாதனையான 2.39 மீட்டர் உயரத்தை தாண்டும் முயற்சியில் தோல்வியை தழுவினர். அதன் முடிவாக இருவரும் தங்க பதக்கத்தை பகிர்ந்துக்கொள்ள சம்மதமா? என நடுவர் குழு கேட்க, பதக்கத்தை பகிர்ந்துக் கொள்கிறோம் என இருவரும் சொல்லினர். அதோடு இந்த நிகழ்வு நண்பர்கள் தினத்தன்று நடந்தது கூடுதல் சிறப்பு.
ஒலிம்பிக் அரங்கில் ஒலித்த ஜெர்மனி வீராங்கனைகளின் எதிர்ப்பு குரல்!
உடலை வளைத்து, நெளித்து ஆடும் விளையாட்டான ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பங்கேற்று விளையாடும் வீராங்கனைகளுக்கு மரபு ரீதியான ஆடை கட்டுப்பாடுகள் உண்டு. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாரம்பரிய உடை கவர்ச்சியாக இருப்பதாகவும், தங்களது விளையாட்டு திறனை நிரூபிக்கவே விளையாட வந்திருப்பதாகவும் சொல்லி உடலை முழுவதுமாக மறைக்கின்ற ஆடைகளை அணிந்து சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகின்றனர் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் விளையாட்டு வீராங்கனைகள். இதற்கு அந்நாட்டின் விளையாட்டு கூட்டமைப்பும் ஆதரவு கொடுத்துள்ளது.
முதலில் ஐரோப்பிய ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் தொடரில் இந்த டிரஸ் கோடுகளை அவர்கள் புறம் தள்ளியிருந்தனர். தற்போது அதன் தொடர்ச்சியாக டோக்கியோ ஒலிம்பிக்கிலும் உடலை முழுவமதுமாக மறைக்கின்ற FULL BODY SUIT உடையை அணிந்து விளையாடி வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு முதல் தங்கம் வென்று கொடுத்த வீராங்கனை! பரிசுகளை அள்ளிக் கொடுத்த நல் உள்ளங்கள்
பிலிப்பைன்ஸ் நாட்டுக்காக ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார் ஹிடிலின் டயஸ். 30 வயது வீராங்கனையான அவர் பளு தூக்கும் விளையாட்டில் தான் நாட்டிற்காக தங்கத்தை தட்டி தூக்கியுள்ளார். 97 ஆண்டு காலமாக ஒலிம்பிக்கில் பங்கேற்றும் பிலலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த வீரர்களால் தங்கப் பதக்கத்தை மட்டும் ஏனோ வெல்ல முடியவில்லை. அந்த ஏக்கத்தை தான் போக்கியுள்ளார் ஹிடிலின்.
அதிர்ச்சி கொடுத்த சிமோன் பைல்ஸ்!
அமெரிக்க நாட்டின் ஒலிம்பிக் பதக்க நம்பிக்கைகளில் ஒருவர் 24 வயதான சிமோன் பைல்ஸ். அதற்கு காரணம் அவரது முதலாவது ஒலிம்பிக்கான ரியோவில் மட்டும் 4 தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை அவர் வென்றிருந்தார். டோக்கியோவிலும் அது நடக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் கைகூடாமல் போனது.
அதற்கான காரணத்தை அவரே சொல்கிறார் “நான் எனக்கு சரியென படுவதை செய்ய வேண்டும். என் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எனக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுக்கிறேன்.
ஒலிம்பிக் என்பது மிகப்பெரிய களம். இருந்தாலும் எனது மனமும், உடலும் ஒரே நேர்கோட்டில் பயணிக்காத (Sync) காரணத்தினால் விலகுகிறேன்” என தெரிவித்திருந்தார்.
இருந்தாலும் அந்த முடிவை பின்வாங்கிக் கொண்ட அவர் தனி நபர் பேலன்ஸ் பீம் ஈவெண்டில் பங்கேற்று வெண்கலம் வென்றார்.
ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை உயிர்பிக்க செய்த ஜூவட் மற்றும் நிஜெல் அமோஸ்:
ஆடவர் 800 மீட்டர் ஓட்டம் அரையிறுதியில் அமெரிக்காவின் ஜூவட் மற்றும் போஸ்ட்வானாவின் நிஜெல் அமோஸ் என இருவரும் நிலைதடுமாறி அடுத்தடுத்து களத்தில் ஓடிக் கொண்டிருந்த போது கீழே விழுந்தனர். இருவரும் சில நொடிகளில் தங்களுக்கு உதவிக் கொண்டு எழுந்து நின்று மீண்டும் ஓட்டத்தை தொடங்கினர். இதில் அமோஸ் இறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தினார். அவர்களது செயல் களத்தில் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை உயிர்ப்போடு இருக்க செய்தது.
5 வீரர்களை அனுப்பி 3 பதக்கங்களை வென்ற நாடு – சான் மரினோ!
மொத்தமே 33600 பேரை மக்கள் தொகையாக கொண்ட நாடு சான் மரினோ. டோக்கியோ ஒலிம்பிக்கில் 5 வீரர்களை அனுப்பியுது. அதில் மூன்று பேர் பதக்கம் வென்றுள்ளனர். ஒரு வெள்ளி, 2 வெண்கலம். துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தத்தில் இந்த பதக்கத்தை அந்த நாட்டு வீரர்கள் வென்றிருந்தனர்.