டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் நேரில் சந்தித்து வருகின்றனர்.
வேளாண் திருத்த சட்டம் குறித்த சர்ச்சை எழுந்ததிலிருந்து கிட்டத்தட்ட 10 மாதங்களாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நிறைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலிருந்து ஜந்தர் மந்தர் பகுதிவரை ராகுல்காந்தி தலைமையிலான எதிர்க்கட்சியினர் பேரணியாக வந்தனர்.
இந்த பேரணியில் தமிழகத்திலிருந்து திமுக சார்பாக திருச்சி சிவா, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், நடராஜன், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள்தவிர காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இந்த பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக, இன்று காலையே ராகுல்காந்தி இதுகுறித்து 14க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். ஆலோசனையின் முடிவில் பேரணி குறித்து முடிவெடுக்கப்பட்டது.