தமிழக காவல்துறை இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு நேற்று உத்தரவிட்டார். மேலும், காவலர்களின் பிறந்தநாள், திருமண நாளன்று குடும்பத்துடன் நேரம் செலவிடும் வகையில் விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், வார விடுமுறை தேவைப்படவில்லை எனத் தெரிவிக்கும் காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், காவலர்களுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட எஸ்பிக்கள் தவறாமல் செயல்படுத்தவும் அறிவுறுத்தி இருக்கிறார்.
சைலேந்திர பாபுவின் இந்த உத்தரவு நம்பிக்கை தருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’காவலர்களுக்கு வாரவிடுமுறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவுகள் நம்பிக்கையளிக்கின்றன. மகிழ்ச்சியான பணிச்சூழலில் தமிழக காவல்துறை இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழவேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
காவலர்களுக்கு வாரவிடுமுறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவுகள் நம்பிக்கையளிக்கின்றன. மகிழ்ச்சியான பணிச்சூழலில் தமிழக காவல்துறை இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழவேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 31, 2021