விளையாட்டு உலகின் திருவிழாவான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தற்போது கோலாகலமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் இதுவரை ஒரே ஒரு பதக்கம் மட்டுமே வெல்லப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிகளவில் பதக்கம் வென்ற நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றதும் அதை வீரர்கள் கடித்தபடி இருக்கும் புகைப்படத்தை பலமுறை நாம் பார்த்திருப்போம். அது ஏன்? அதன் பின்னணி என்ன? என்பதை பாரப்போம்.
சொக்கத்தங்கம் தானா என்பதற்கான சோதனையா?
ஆதி காலத்தில் கரன்சிக்கு பதிலாக தங்க காசுகள் வணிகத்திற்காக பயன்படுத்தப்பட்ட போது அதன் நம்பத்தன்மையை அறியும் நோக்கில் வணிகர்கள் அதனை கடித்து பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக வரலாறு சொல்கிறது. தங்கம் மிகவும் மென்மையான உலோகம் என்பதால் கடித்து பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கின்றனர்.
1912 ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு பிறகு சுத்த தங்கத்தினாலான பதக்கங்கள் கொடுக்கப்படுவதில்லை. தற்போது கொடுக்கப்பட்டு வரும் தங்க பதக்கங்கள் 92.5 சதவிகிதம் வெள்ளியினால் உருவானது. வெறும் 6 கிராம் தங்கம் மட்டுமே தங்கப்பதக்கம் உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. அதனால் ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்ற வீரர்கள் தங்கத்தை சோதிப்பதற்காக பதக்கத்தை கடிக்கவில்லை என்பதை சொல்லியாக வேண்டும்.
பின் எதற்காக இதனை வீரர்கள் செய்கிறார்கள்?
இதற்கெல்லாம் காரணம் புகைப்பட கலைஞர்கள் தானாம். இதனை ஒலிம்பிக் குறித்த வரலாற்றை ஆய்வு செய்து வரும் சங்கத்தின் தலைவர் டேவிட் வாலெச்சின்ஸ்கி தெரிவித்துள்ளார். ‘ஒலிம்பிக் பதக்கத்தை வீரர்கள் கடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை மரபு போல புகைப்படக் கலைஞர்கள் கடைபிடித்து வருகின்றனர்’ என அவர் சொல்கிறார்.
காண்பவர்களை கவரும் வகையில் அந்த புகைப்படம் இருப்பதற்காக புகைப்பட கலைஞர்கள் இந்த தீமில் போட்டோ பிடிப்பதை கடைபிடித்து வரலாம் எனவும் சொல்லப்படுகிறது.
அப்படி பதக்கத்தை கடித்தபடி வீரர்கள் போஸ் கொடுத்த சமயங்களில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த David Moeller என்ற வீரரின் பற்கள் உடைந்துள்ளதாம். அந்த சம்பவம் 2010 குளிர்கால ஒலிம்பிக்கில் நடந்துள்ளது.
இருப்பினும் பதக்கத்தை கடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வழக்கம் என்பது ஒலிம்பிக் விளையாட்டுடன் இரண்டறக் கலந்து விட்டது. வரும் நாட்களிலும் இது தொடரும்.