நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஒரசோலை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. கட்டட தொழிலாளியான இவர், கட்டுமான பணிகளுக்காகப் பல இடங்களுக்குச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் பலரது வீடுகளிலும் பூந்தோட்டங்களைப் பராமரிப்பதைக் கண்டு, பெரியசாமிக்கும் ஈர்ப்பு ஏற்பட்டு, தனது வீட்டிலும் பூச்செடிகளை நடவு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் இருந்து பூச்செடிகளைக் கொண்டுவந்து நல்ல முறையில் பராமரித்து வருகிறார்.
Also Read: `மக்காச்சோளத்தில் படைப்புழுவைக் கட்டுப்படுத்த புது முயற்சி!’ – திருவண்ணாமலை வேளாண் கல்லூரி அசத்தல்
கட்டட தொழிலாளி என்பதால், பூந்தொட்டிகளை வெளியில் வாங்காமல் சிமென்ட் கலவைகள் மூலம் கலை நயமிக்க புதிய வடிவிலான பூந்தொட்டிகளை வடிவமைத்து அதில் பூச்செடிகளை நடவு செய்து பராமரித்து வருகிறார். புது முயற்சியாக, பயன்படுத்த முடியாத பழைய ஜீன்ஸ் பேன்ட்களை பூந்தொட்டியாக மாற்றி அதில் பூச்செடிகளை வளர்த்து வருகிறார். இவரது இந்த முயற்சி உள்ளூர் மக்களிடம் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
இந்த மாற்று சிந்தனை குறித்து பெரியசாமியிடம் பேசினோம், “பெரிய பெரிய பங்களாக்களுக்கு கட்டட வேலைக்கு போனபோது, அங்க இருக்குற மாதிரி அழகான பூச்செடிகளை நம்மளும் வளர்க்கணும் அப்படிங்கிற ஆசை வந்தது. அதுக்கான பெரிய இட வசதியோ, பொருளாதாரமோ அந்த அளவுக்கு இல்ல. சரி இருக்குறத வச்சி பண்ணலாம்னு முயற்சி பண்ணேன். பல டிசைன்ல சிமென்ட் பூந்தொட்டியை நானே செஞ்சேன்.
Also Read: `500 தொட்டிகள்; 9 வருஷமா கடைல காய்கறிகள் வாங்குறதே இல்ல!’ – மாடித்தோட்டத்தில் அசத்தும் பெண் விவசாயி
ஒரு டைம் யூடியூப்ல வெளி நாட்டு வீடியோ ஒன்னு பாத்தேன். பழைய ஜீன்ஸ் பேன்ட்ல எப்படி பூந்தொட்டி செய்யறதுன்னு அந்த வீடியோவில் சொன்னாங்க. பசங்களோட பழைய ஜீன்ஸ் பேன்ட், ஷூ, பெல்ட் இதெல்லாம் வச்சு பாதி அளவு சிமென்ட் கலவை, மீதிக்கு மண் போட்டு, தொட்டியா மாத்தி செடிகளை நட்டேன். நல்லாவே வளருது. யூஸ் பண்ணின பொருள்களை வீணாக தூக்கிக் குப்பைல போடாம இந்த மாதிரி நீங்களும் பயன்படுத்தலாம்” என்றார்.