பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய மனித உரிமைப் போராளியும் 84 வயது நிரம்பிய இயேசு சபை குருவுமான ஸ்டான் சுவாமி நீதிமன்ற காவலில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லையில் அவரது அஸ்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்து நிகழ்ச்சி வண்ணார்பேட்டை பகுதியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காவல்துறையினர் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டார்கள்.
வண்ணார்பேட்டை பகுதியில் ஸ்டான் சுவாமியின் உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி, உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்கள், அரசியல் கட்சியினர் இதில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் பதாகை ஏந்தியபடி ஸ்டான் சுவாமி மரணம் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தேசத்துரோக சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சிறைகளில் வாடும் 15 மனித உரிமை போராளிகளை மத்திய அரசு நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினார்கள்.