+2 மாணவர்கள் 100% தேர்ச்சி: தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண்கள் வெளியானது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரும்பும் மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு: மதிப்பெண்கள் போதவில்லை என கருதும் மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், 22-ஆம் தேதி முதல் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார்.

அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு: பிரதமர் மோடியை பேசவிடாமல் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்: அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த தயார் என்றும், ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மேகதாது குறித்து விவாதிக்க திமுக நோட்டீஸ்: மேகதாது அணை விவகாரம் பற்றி மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக உறுப்பினர் திருச்சி சிவா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

குடியரசுத் தலைவரை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சற்று நேரத்தில் சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்: சொகுசு காருக்கான வரி விவகாரம் தொடர்பான நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உளவு பார்க்கப்பட்ட 300 பேர்?: இந்தியாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 300-க்கும் அதிகமானோரின் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டிருக்கக்கூடும் என்றும், இஸ்ரேல் நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் கண்காணிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்பா? – அரசு மறுப்பு: செல்போன் உரையாடல்களை கண்காணித்ததாக வெளியான குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது. தனிநபர் ரகசியம் காக்கப்படுவது அடிப்படை உரிமை என்றும் விளக்கமளித்திருக்கிறது.

தொடரும் மீனவர்கள் போராட்டம்: சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி 3-வது நாளாக 13 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி ஆற்றின் மூலம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12, 804 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்தும் வினாடிக்கு இரண்டாயிரம் கன அடி உயர்ந்திருக்கிறது.

ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு கருவாடு விற்பனை: கடலூரில் ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு கருவாடுகள் விற்பனையாகியுள்ளது. தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

வடமாநிலங்களில் கனமழை: டெல்லி, ஹரியானா, குஜராத்தில் மழை கொட்டித் தீர்க்கிறது. தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதியில் உள்ளனர்.

பயங்கரவாதிகள் இருவர் என்கவுன்ட்டர்: காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதி உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோபியானில் நடந்த என்கவுன்டரில் பாதுகாப்பு படை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.