புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு, ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் வந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு ஜூலை 15-ம் தேதி தொடங்கியது. ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் வந்திருப்பதாக ஓலா நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படாத எலெக்ட்ரிக் வாகனத்துக்கு ஒரே நாளில் ஒரு லட்சம் வானங்கள் முன்பதிவு என்பது இதுவரை நடக்காதது எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அருகே ஒலா எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடி வாகனங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 20 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் வாகனத்தில் 18 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். இதன்மூலம் 75 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம். முழுமையான சார்ஜ் செய்யும்போது அதிகபட்சம் 150 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என ஓலா தெரிவித்திருக்கிறது.
400 நகரங்களில் ஒரு லட்சம் சார்ஜ் ஏற்றும் மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக ஓலா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த வாகனங்களுக்கான பெயர் முறையாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் சீரியஸ் எஸ், எஸ் 1 மற்றும் எஸ் 1 புரோ என்னும் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.