மத்தியப் பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்கும் போராட்டத்தின்போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் தண்ணீரில் விழுந்தனர்.
விதிஷா மாவட்டம் கஞ்ச் பசோடா என்ற கிராமத்தில் நேற்றிரவு ஒரு சிறுமி கிணற்றில் தவறி விழுந்துவிட, அவரை மீட்கும் முயற்சியில் கிராமத்தினர் ஈடுபட்டனர். எதிர்பாராதவிதமாக கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அதனை சூழ்ந்திருந்த அனைவரும் கிணற்றுக்குள் விழுந்தனர். தகவலறிந்த மாநில பேரிடர் மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
16 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மற்ற அனைவரையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்தவரும் மத்தியப் பிரதேச கல்வி அமைச்சருமான விஸ்வாஸ் சரங் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு வருகிறார். மீட்புப் பணிகள் குறித்த தகவல்களை முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கேட்டறிந்து வருகிறார்.