தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது குறித்து திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களிடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் அரக்கோணம் அதிமுக உறுப்பினர் ரவி பேசுகையில், அதிமுக ஆட்சியின்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய தற்போதைய முதல்வர், கொரோனா பரவும் சூழலில் மதுக்கடைகளை திறந்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு, “தொற்று குறைந்த மாவட்டங்களில் மட்டுமே மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது” என்று மதுவிலக்கு – ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் கூறினார்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு ஜூன் மாத கொரோனா பாதிப்புகளையும் தற்போதைய பாதிப்புகளையும் ஒப்பிட்டு பேசினார்.

அதற்கு பதிலளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த மே 7 ம் தேதி 26 ஆயிரமாக இருந்த தொற்றின் எண்ணிக்கை, திமுக அரசின் நடவடிக்கையால்தான் தற்போது 7 ஆயிரமாக குறைந்திருக்கிறது” என்று பதிலளித்தார்.

விவாதம் நீடித்துக் கொண்டே போன நிலையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிமுக ஆட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்தியதாகவும், திமுக ஆட்சியில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.