கனடாவில் டிரக் ஏற்றிக் கொல்லப்பட்ட குடும்பத்தினருக்கு, ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
வெறுப்பை அன்பால் வெல்வோம், வெறுப்புணர்ச்சிக்கு இங்கு இடமில்லை எனப் பொருள்படும்படியான வாசகங்கள் உள்ள பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். கடந்த ஞாயிறன்று ஆன்டாரியோ மாகாணத்தின் லண்டன் நகரில் மாலைப்பொழுதில் டிரக் ஒன்று மோதியதில் இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். அக்குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் மட்டுமே தப்பிப்பிழைத்தார்.
விபத்து எனக் கருதப்பட்ட இந்நிகழ்வானது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும், மத வெறுப்புணர்வால் நிகழ்த்தப்பட்டது என்றும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட நாதனியேல் வெல்ட்மேன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கொல்லப்பட்ட இஸ்லாமியக் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் ஆன்டாரியோ மாகாணம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டன.