இந்திய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையான கோவிந்த் வல்லப் பந்த் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் மலையாளத்தில் பேசக் கூடாது என்றும். அலுவல் பணியின் போது ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில்தான் பேச வேண்டுமெனவும் சொல்லப்பட்டது. அந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கடந்த 5ஆம் தேதி அன்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இது பலத்த சர்ச்சையாக எழுந்த நிலையில் அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
என்ன நடந்தது?
கடந்த மே 31 மற்றும் ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் மருத்துவமனை ஊழியர்கள் பலரும் பிராந்திய மொழிகளில் பேசிக் கொள்வதாக தங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக தெரிவித்தது ஜிபி பண்ட் மருத்துவமனை நிர்வாகம். இதனால் மறுத்துவமனையில் பணியாற்றும் பிற ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு மொழியை புரிந்து கொள்வதில் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் அலுவல் பணி தொடர்பான உரையாடலின் போது ஊழியர்கள் பிராந்திய மொழியை பயன்படுத்த வேண்டாம் எனவும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த அறிக்கை பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே இந்த உத்தரவு விலக்கிக் கொல்லப்பட்டதாக தெரிகிறது. மருத்துவமனையின் அறிக்கைக்கு ஊழியர்கள் சிலரும் தங்களது கருத்தை தெரிவித்திருந்தனர்.
வருத்தம் தெரிவித்த நிர்வாகம்
இந்த நிலையில் தான் கடந்த 7ஆம் தேதியன்று வெளியான கடிதத்தின் மூலம்கா தனது வருத்ததை மருத்துவமனை நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. எங்களுக்கு வந்த புகார்களின் அடிப்படையில்தான் இந்த முடிவை எடுத்தோம். இது முழுவதும் நோயாளிகளின் நலன் மீது நாங்கள் கொண்டிருந்த அக்கறையின் வெளிப்பாடு. பெரும்பாலான ஊழியர்கள் பிராந்திய மொழியில் பேசிக் கொள்வதால் நோயாளிகளின் உடன் இருப்பவர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு அந்த மொழியை புரிந்து கொள்வதில் உள்ள நடைமுறை சிக்கலை களையவே இந்த ஏற்பாடு.
Circular was issued in a positive sense & there was no bad intention against Malayali-speaking staff. Circular was misinterpreted about its true sense & I didn’t get a chance to explain. If any staff’s feeling got hurt, I apologise: Nursing Superintendent, GB Pant Institute Delhi pic.twitter.com/aVJL0fFvbA
— ANI (@ANI) June 9, 2021
சிலர் தங்கள் உறவினரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் தான் மாற்று மொழியில் ஊழியர்கள் பேசிக் கொள்வதாக அச்சம் கொள்கின்றனர். அதை தவிர்க்கவே இந்த ஏற்பட்டதை செய்தோம். அனைவருக்கும் பொதுவான ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசுவதுதான் இதற்கு தீர்வு. அதனால் அந்த மொழியை பேசுமாறு சொன்னோம். மற்றபடி இந்த சுற்றறிக்கையில் பிராந்திய மொழி பேசும் ஊழியர்களின் மனதை புண்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் செய்தது கிடையாது. இதில் மொழி வேற்றுமை பேதம் எதுவும் இல்லை. உள்ளர்த்ததுடன் இது செய்யப்படவும் இல்லை. இதற்காக எங்களது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதே போல அந்த அறிக்கையில் ‘கடும் நடவடிக்கை’ என்பது தட்டச்சு பிழை மட்டும்தான். நடவடிக்க என்பதற்கு பதிலாக அப்படி வந்துவிட்டது என மருத்துவமனை நிர்வாகம் தனது விளக்கத்தை கொடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.