வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ்க்கு இணையானவர் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சல்மான் பட் “டொயோட்டோ கொரோலா கார்கள்போல பும்ரா இல்லை. அவர் உயர் ரக கார்களான லாம்போர்கினி, பெராரி காரை போன்றவர். அவர் இந்தியாவுக்கு மிகவும் ஸ்பெஷலான பவுலர், அவரின் திறனை வீணடிக்காமல் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். மிக, முக்கியமான போட்டிகளில் பும்ராவின் பங்கு அவசியமானதாக இருக்கும். அவர் முக்கியத் தருணங்களில் தன்னை ஏற்கெனவே நிரூபித்திருக்கிறார். அவர் இந்திய அணிக்கான பொக்கிஷம்” என்றார்.
மேலும் “ஒரு கேப்டனுக்கு பும்ரா மிகவும் முக்கியமானவர். அதில் ரோகித் சர்மா அவரை மிகவும் சரியான விதத்தில் பயன்படுத்துகிறார். பும்ராவுக்கு முதலில் சில ஓவர்கள் கொடுத்துவிட்டு, பின்பு அவருக்கு ஓய்வுக் கொடுத்து, இறுதியில் மீண்டும் பந்துவீச அழைக்கிறார். இது ஒரு நல்ல அணுகுமுறை. ஏனென்றால் இறுதி ஓவர்களில் பும்ராவின் பந்துவீச்சில் ரன்களை சேர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை” என்றார் சல்மான் பட்.
“பாகிஸ்தான் அணிக்கு ஒரு காலத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோர் எவ்வளவு முக்கியமானவர்களாக திகழ்ந்தார்களோ. அவர்களுக்கு இணையாக இப்போது பும்ரா இந்திய அணிக்காக இருக்கிறார். அவர்களுக்கு ஈடாக யார்க்கர் முதல் அனைத்துவிதமான ஸ்விங் பந்துகளை வீசக் கூடிய ஆற்றல் படைத்தவர் பும்ரா” என்றார் சல்மான் பட்.