அப்பெண்டிசைட்டிஸ் அறுவைச் சிகிச்சை முடித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் விரைவாக குணமடைந்து வருவதால் அவர் இங்கிலாந்து செல்லும் அணியில் இணையலாம் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம் செய்து அந்நாட்டுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. மேலும் ஜூன் 18 ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. அதற்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த அணியில் விக்கெட் கீப்பர் சஹா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் குணமாகும்பட்சத்தில் அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்துக்கொண்ட கே.எல்.ராகுல் விரைந்து குணம்பெற்று வருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் தொடரின்போது திடீர் வயிற்றுவலியால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் கே.எல்.ராகுல். இதனையடுத்து அவருக்கு அப்பெண்டிசைட்டிஸ் இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இது குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர் “கேஎல் ராகுல் முழுவதுமாக குணமடைந்துவிட்டார், அவர் இந்திய அணியுடன் இங்கிலாந்து செல்வார். போட்டிக்கு இன்னும் ஒருமாதம் இருப்பதால் ராகுல் இந்திய அணியுடன் செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது ” என்றார் அவர்.