இந்தியாவில் கொரானாவின் பாதிப்பு குறைவதற்கான அறிகுறிகள் தொடங்கி இருப்பதால், இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்தன. தினசரி பாதிப்புகள் 3 லட்சத்துக்கு கீழ் சரிந்துள்ளது. தவிர, ஆசிய சந்தைகளும் சாதமாக இருப்பதால், இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன.
7 வாரங்களுக்கு பிறகு சென்செக்ஸ் மீண்டும் 50,000 புள்ளிகளைக் கடந்து உயர்ந்தன. சென்செக்ஸ் 613 புள்ளிகள் உயர்ந்து 50,193 புள்ளிகளில் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 பங்குகளில் 25 பங்குகள் உயர்ந்து முடிந்தன. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 185 புள்ளிகள் உயர்ந்து 15,108 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பங்குகளின் சந்தை மதிப்பு மே 17-ம் தேதி வர்த்தகத்தின் முடிவில் ரூ.213.6 லட்சம் கோடியாக இருந்தது. மே 18-ம் தேதி ரூ. 2.8 லட்சம் கோடி உயர்ந்து ரூ.216.4 லட்சம் கோடியாக இருக்கிறது. கடந்த இரு நாட்களில் பிஎஸ்இ சந்தை மதிப்பு ரூ.5.78 லட்சம் கோடி உயர்ந்திருக்கிறது.
டெலிகாம் மற்றும் எப்.எம்.சி.ஜி குறியீடுகளை தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் உயரந்து முடிந்தன. பிஎஸ்இ ஆட்டோ குறியீடு அதிகபட்சமாக 3 சதவீதம் உயர்ந்தது. அதிகபட்சமாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்கு 5.77 சதவீதமாக உயர்ந்தது.