அடுத்த 6 வாரங்களில் அமெரிக்காவில் இருந்து 8 கோடி தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு அனுப்பப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
உலகில் பல ஏழை நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் உலக சுகாதர நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ராஸ் அதானம் கூறியிருந்தார்.
இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உலகமே கொரோனா பெருந்தொற்றால் ஸ்தம்பித்துள்ள சூழலில் அமெரிக்கா முழுமையான பாதுகாப்புடன் உள்ளதாக நிச்சயம் கருத முடியாது என தெரிவித்துள்ளார். அடுத்த 6 வாரங்களில் 8 கோடி தடுப்பூசிகளை அமெரிக்கா மற்ற உலக நாடுகளுக்கு வழங்கும் என பைடன் பதிவிட்டுள்ளார். இக்கட்டான சூழலில் செய்ய வேண்டிய சரியான, புத்திசாலித்தனமான, செயல் இது எனவும் பைடன் குறிப்பிட்டுள்ளார்