கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசு வழங்கும் 2 ஆயிரம் ரூபாயை மழையிலும் வரிசையாக நின்று காத்திருந்து வாங்கிச் செல்லும் மக்கள்!
இடம்: சேலாஸ், நீலகிரி மாவட்டம்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் வாங்க குவிந்த கூட்டம்!
சென்னையில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து, கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு பதில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அங்கு மருந்து வாங்க குவிந்திருக்கும் மக்கள் கூட்டம்!
இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,43,72,907 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,890. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,66,207-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,04,32,898-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 36,73,802 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,53,299 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரை 18,04,57,579 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது
திடீர் விசிட் அடித்த ஸ்டாலின்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருந்தாலும் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா வார் ரூமிற்கு முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு திடீர் விசிட் அடித்தார். அப்போது அங்கு நடைபெறும் பணிகளை கண்காணித்தார். அந்த நேரம் உதவி கோரி வந்த அழைப்பு ஒன்றுக்கு, `நான் ஸ்டாலின் பேசுறேன்’ என தானே பதில் அளித்து தேவையான உதவிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த வார் ரூம் மூலம் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இருப்பு விவரத்தினை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், அனைத்து அழைப்புகளுக்கும் முறையான உதவி மற்றும் ஆலோசனைகள் தடையில்லாமல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.