”நோய் முற்றி தனியார் மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்கு வருபவர்களும், ஆக்ஸிஜன் வசதி தேவைப்படும் புதிய நோய் தொற்று உள்ளவர்களும் அரசு மருத்துவமனையை நோக்கி படையெடுக்கிறார்கள். இங்கு படுக்கைகள் இல்லாததால் அவர்களுக்கு ஆம்புலன்ஸிலேயே ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது”
இந்தியாவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. ஒரு நாளைக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது. உயிரிழப்புகளும் 4 ஆயிரத்தைக் கடக்கின்றது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்தைத் தாண்டுவதோடு, ஒவ்வொரு நாளும் 250-க்கும் மேற்பட்டவர்கள் மரணிக்கிறார்கள்.
சேலத்தில் தொடர்ந்து 10 நாட்களாக ஒவ்வொரு நாளும் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய தொற்று ஏற்படுகிறது. அதனால் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா மையங்களான தொங்கும்பூங்கா, சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி, மணியனூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரி, கருப்பூர் பொறியியல் கல்லூர் போன்றவைகள் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.
சேலம் மாவட்டம் முழுவதும் குறைந்தது 3500-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் இருக்கின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் 850 படுக்கைகள் இருக்கின்றன. அதில் 600 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியோடு கொண்ட சிறப்பு படுக்கைகள். மற்றவை சாதாரண படுக்கைகள். இங்குள்ள அனைத்து படுக்கைகளும் நிறைந்து விட்டன.
Also Read: கோவை: `அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்’ – இன்னும் கவனம் தேவை!
நோய் முற்றி தனியார் மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்கு வருபவர்களும், ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் தேவைப்படும் நோயாளிகளும் அரசு மருத்துவமனையை நோக்கி படையெடுக்கிறார்கள். இங்கு படுக்கைகள் இல்லாததால் மருத்துவமனை வளாகத்திலேயே ஆம்புலன்ஸூகளை நிறுத்தி வைத்து நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதுபற்றி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தனபால் கூறியதாவது,“ சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையின் கெபாசிட்டி 600 பேர். ஆனால் தற்போது 1100-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு, கள்ளக்குறிச்சி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் இருந்தும் இங்கு நோயாளிகள் வருவதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 30 பேர் டிஸ்சார்ஜ் ஆகிறார்கள் என்றால் 60-க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் இருந்தும், புதிய நோயாளிகளாகவும் வருகிறார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்று விநாயகா மருத்துவக் கல்லூரியில் 250 படுக்கைகள், அன்னப்பூர்ணா மருத்துவ கல்லூரியில் 250 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இரும்பாலையில் 500 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அனைத்தும் ஆக்ஸிஜன் வசதியோடு இருப்பதால் உயிர்பலியை தடுக்க முடியும்” என்றார்.