கொரோனா தொற்று பரவலிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசிகள் மட்டுமே வழியாக இருக்கும் சூழலில், உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகிலேயே 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 4 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்ட முதல் நாடாக இந்தியா உள்ளது. இப்படி ஒரு சூழலில் தடுப்பூசிகளை விரைந்து செலுத்துவதும், நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதும் தான் நம்மை தற்காத்து கொள்வதற்கான முக்கிய வழிகள். தாமதித்தால் தடுப்பூசிகள் செயலிழக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் பரவி வருவது பி.1.617 வகை நோய் கிருமி. உருமாறிய இந்த வைரஸின் வீரியம், மற்றும் பரவும் தன்மை முதல் அலையில் பரவிய வைரசை விட பல மடங்கு அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். மேலும் அமெரிக்கா, பிரிட்டன் சுகாதாரத் துறையினர் இது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இரண்டாம் அலை வேகமாக பரவ காரணம் இது மட்டும் இல்லாமல், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மக்கள் கைவிட்டதும் காரணம் என்கின்றனர்.
தற்போது இந்தியாவில் கிட்டதட்ட 2% பேர் மட்டும் தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்கும் நிலையில், வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்தால் அது மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்றும், அதனை தடுப்பூசிகளால் கூட தடுக்க முடியாத சூழல் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகிறார் டாக்டர் சவுமியா சாமிநாதன்.
முன்பாக, இந்தியாவில் கொரோனா முன்றாம் அலைக்கான வாய்ப்புகள் உள்ளதென்றும், எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் தலைமை விஞ்ஞான ஆலோசகர் அறிவுறுத்தியிருந்தார்.