விரைவில் நடைபெற உள்ள இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் முற்றிலும் மாறுபட்ட புதிய அணியை களம் இறக்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
“இந்திய ஆடவர் கிரிக்கெட் சீனியர் அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணிக்கு எதிராக நடத்த திட்டமிட்டுள்ளோம். அநேகமாக இந்த தொடர் ஜூலை மாதம் நடைபெறலாம். இந்த தொடரில் ஷார்ட்ர் பார்மெட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களை களம் இறக்க உள்ளோம். முற்றிலும் மாறுபட்ட புதிய அணியாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட உள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரையிலான நாட்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. அதனால் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியின் இரண்டாவது பிளேயிங் லெவன் கொண்ட வீரர்கள் தான் விளையாடுவார்கள் என தெரிகிறது.