கேரளாவில் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்க அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளன. கர்நாடகாவில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிக பாதிப்பு தலைநகரான பெங்களூரில் ஏற்பட்டு வருகிறது. அங்கு ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 26ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதற்கு பிறகும் நோய் பரவல் குறையவில்லை என்பதால், மீண்டும் இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகாவில் காலை 6 முதல் காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் திறந்திருக்கும்.
நாட்டிலேயே பாதிப்பில் 3ஆம் இடத்தில் உள்ள கேரளாவில் தினசரி தொற்று எண்ணிக்கை 40 ஆயிரமாக உள்ளது. அங்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் 9 நாட்களுக்கு முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 16ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும். இந்த பொதுமுடக்க காலத்தில் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அதே போல் புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் இலவசமாக உணவு விநியோகம் செய்யப்படும் என கேரள முதல்வர் கூறியுள்ளார்.