ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது நோட்டோ (NOTO) நகரம். இந்நகரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ராட்சத அளவிலான ‘கனவா மீன்’ சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவ அந்த நகரத்தின் நிர்வாகம் கொரோனா நிவாரண நிதியை பயன்படுத்தியதாக தெரிகிறது. இந்த விவகாரம் பொதுவெளியில் தெரிந்ததும் பலரும் சமூக வலைத்தளத்தில் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது நகர நிர்வாகம்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஜப்பான் நாட்டின் மைய அரசு NOTO நகரத்திற்கு 7.31 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 54 கோடி ரூபாய். அதில் இரண்டு கோடி ரூபாயை எடுத்து இந்த கனவா சிலையை நிறுவியுள்ளது நகர நிர்வாகம்.
கனவா மீன் தங்கள் பகுதியில் அதிகளவில் கிடைப்பதால் அதன் சிலையை நிறுவி, அதன் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில் இதை செய்துள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு நகர நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. இருப்பினும் அந்த நிதியை திருப்பி கொடுக்க வேண்டும் என இணையத்தில் நெட்டிசன்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.